பதிவு செய்த நாள்
09
மே
2025
09:05
திருப்பரங்குன்றம்; அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர், பால மீனாம்பிகை கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டு பிரநிதியாக நாகசுப்பிரமணியன், பெண் வீட்டு பிரதிநிதியாக ராமசுப்பிரமணியன் திருமண சடங்குகளை செய்தனர். இரவு பூப்பல்லக்கில் பால மீனாம்பிகை, கஜ வாகனத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர், பிரியாவிடை எழுந்தருளினர்.
திருப்பரங்குன்றம் கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மீனாட்சி அம்மன், சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பட்டாபிஷேக ராமர் கோயிலில் இருந்து சீர் வரிசைகள் எடுத்துவரப்பட்டன. காசி விஸ்வநாதர், விசாலாட்சிக்கு திருக்கல்யாணம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலுார்: தும்பைபட்டி சங்கரநாராயணர் சுவாமி கோயிலில் சுவாமிக்கும், கோமதி அம்பிகைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. ஏற்பாடுகளை அர்ச்சகர் ராஜேஷ் கண்ணன், சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். சோழவந்தான்: மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. பெண் வீட்டாராக கோபு பட்டரும், மாப்பிள்ளை வீட்டாராக கணேச பட்டரும் திருமண சடங்குகளை செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் ரேகா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தென்கரை மூலநாதசுவாமி அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. பெண் வீட்டாராக சதீஷ் பட்டரும், மாப்பிள்ளை வீட்டாராக ராகவேந்திர பட்டரும் திருமண சடங்குகளை செய்தனர். பிரதோஷ கமிட்டியினர்,செயல் அலுவலர் கார்த்திகைச்செல்வி, பக்தர்கள் பங்கேற்றனர்.