பதிவு செய்த நாள்
10
மே
2025
01:05
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், 10 நாட்கள் பிரம்மோத்சவம் விமரிசையாக நடைபெறும். நடப்பு ஆண்டுக்கான உத்சவம் நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பிரம்மோத்சவத்தின் சுவாமி வீதியுலாவின்போது, சுவாமிக்கு நிழல் தரும் வகையில் புதிய திருக்குடைகள் எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது.
இதையொட்டி காஞ்சிபுரம் சங்கரமடம் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில், வரதராஜ பெருமாளுக்கு திருக்குடை தயாரிக்கும் பணியில், காஞ்சிபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ராமச்சந்திரன் கூறியதாவது:
ஆன்மிகத்தின் அடையாளமாக, ஸ்ரீரங்கம் நடை, காஞ்சிபுரம் குடை, திருப்பதி வடை என குறிப்பிடுவர். அதன்படி, காஞ்சிபுரத்தில் தயாராகும் சுவாமி திருக்குடை புகழ்பெற்றவை. என் தாத்தா வெங்கடபெருமாள் ராஜா, தந்தை கிருஷ்ணமூர்த்தி, நான் மற்றும் என் மகன் அஸ்வின் ராஜ் ஆகியோர் 80 ஆண்டுகளுக்கு மேலாக வரதராஜ பெருமாளுக்கு திருக்குடை செய்து வருகிறோம்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்சவத்தையொட்டி 8 திருக்குடைகளை உபயதாரர்களின் ஆர்டரின்பேரில், தயார் செய்து வருகிறோம். இக்குடைகள் 100 ஆண்டுகள் உழைக்க கூடியவை.
புதிய திருக்குடை செய்ய கேரள மூங்கிலும், அசல் வெண்பட்டு துணியும் பயன்படுத்தி செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.