சிவகாமியம்மன் கோயில் தேரோட்டம் துவங்கியது: ஹரஹர மகாதேவா கோஷமிட்டு இழுத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2025 01:05
சின்னமனுார்: சின்னமனுார் சிவகாமியம்மன் பூலாநந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று மாலை துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
சின்னமனூரில் பழமையும் பிரசித்தி பெற்றதுமான சிவகாமியம்மன் பூலாநந்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவுடன் நடத்தப்படும். சில ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்ததால் 2022 க்கு பின் தேரோட்டம் நடக்கவில்லை. பின் திருப்பணிகள் முடிந்து கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து சித்திரை திருவிழா நடத்த முடிவு செய்தனர்.
மே 1 ல் கொடியேற்றம் நடைபெற்றது. தினமும் ஒவ்வொரு சமூகத்தினரின் மண்டகப்படி நடைபெற்று வருகிறது . நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடைபெற்றதை தொடர்ந்து நேற்று காலை 9:30 மணியளவில் சுவாமியும், அம்பாளும் ரதம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலையில் வடக்கு ரத வீதியில் நிலையில் இருந்து தேரோட்டம் துவங்கியது . முன்னதாக தேரில் எழுந்தருளியுள்ள சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன், நகராட்சி தலைவர் அய்யம்மாள், மாவட்ட தி.மு.க. முன்னாள் இளைஞரணி நிர்வாகி பஞ்சாப் குமரன், செயல் அலுவலர் நதியா ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். சிவ வாத்தியங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹர ஹர மகாதேவா என்ற கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
வடக்கு ரத வீதி, கிழக்கு ரதவீதியின் முடிவில் நிலை நிறுத்தப்பட்டது.
இன்று மாலை 5:00 மணிக்கு மீண்டும் தேர் இழுக்கப்பட்டு தெற்கு ரத வீதி, மெயின் ரோடு வழியாக தேர் நிலை நிறுத்தப்படும்.