பதிவு செய்த நாள்
11
மே
2025
03:05
துாத்துக்குடி; பிரசித்தி பெற்ற துாத்துக்குடி சிவன் கோவிலில், சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது.
துாத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தனர். முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடந்தது. கோவில் அபிஷேக மண்டபத்தில் சுவாமி, அம்பாள், விநாயகர் முருகப்பெருமான் ஆகியோர் எழுந்தருளி சிறப்பு பூஜை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் விநாயகர் மற்றும் முருகப்பெருமானும், பெரிய தேரில் பாகம்பரியாள் மற்றும் சங்கரராமேஸ்வரரும் எழுந்தருளினர். கரகாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், புலி ஆட்டம், ஒயிலாட்டம், குதிரை, செண்டை மேளம், சிலம்பம், சுருள்வாள் வீச்சு உள்ளிட்ட கலைகள் அணிவகுக்க, தேரடி மாடனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்த தேர் நிலையை அடைந்தது.