பதிவு செய்த நாள்
20
மே
2025
10:05
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் ஆதிகுருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை பெருவிழா கருத்தங்கம், சமயப்பயிற்சி வகுப்பு, திருநெறிய தெய்வத்தமிழ்மாநாடு, ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா வைகாசி மாதத்தில் 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் 10ம் திருநாள் ஆதிகுருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழாவும், 11ம் திருநாள் குருஞானசம்பந்தர் குருபூஜை விழாவில் பட்டணபிரவேசம் நிகழ்ச்சியும் நடப்பது வழக்கம். பட்டணபிரவேசத்தில் குருமகா சந்நிதானத்தை சிவிகை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கிசென்று ஆதீன திருமடத்தின் நான்கு வீதிகளில் சுற்றிவந்த பிறகு குருமகா சன்னிதானம் ஞானகொலுக் காட்சியில் அமர்ந்து அருளாசி வழங்குவது வழக்கம். மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்தை அடுத்து கடந்த 2022ம் ஆண்டு அப்போதைய ஆர்டிஓ பாலாஜி தடை விதித்தார். அதன்பிறகு பல்வேறு இந்து அமைப்புகள், ஆன்மீக அமைப்புகள் எதிர்ப்புதெரிவித்ததைஅடுத்து அரசு அந்த தடையை நீக்கியது இதனால் பட்டணபிரவேசம் நிகழ்ச்சி பிரபலமானது கடந்த ஆண்டு கோலாகளமாக நடைபெற்றது.
அதேபோல் இந்த ஆண்டு வைகாசி பெருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19ம் தேதி கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழா நடந்தது. தொடர்ந்து நேற்று குரு ஞானசம்பந்தர் குருபூஜை விழாவையொட்டி தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சொக்கநாதர் பூஜை, குருஞானசம்பந்தர் திருவுருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை செய்து வழிபட்டார். மாலையில் ஞானபுரீஸ்வரர், தர்மபுரீஸ்வரர், தூர்க்கை அம்மன் கோயில் மற்றும் மேலகுருமூர்த்தத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இரவு 11 மணியளவில் தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருஆபாரணங்கள் அணிந்துகொண்டு திருக்கூட்ட அடியவர்கள் படைசுழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். ஆதீன நான்கு வீதிகளிலும் பூர்ணகும்ப மரியாதையுடன் பக்தர்கள் குருமகா சன்னிதானத்திற்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து 27வது குருமகா சந்நிதானம் ஞானகொலுக்காட்சியில் எழுந்தருள திருப்பனந்தாள் ஆதீன இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் பாவானஅபிஷேகம் செய்துவைத்து மகாதீபாராதனை செய்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து குருமகா சந்நிதானம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
இதில் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞானபரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீன இளவரசு சுவாமிகள், தருமை ஆதீனம் திருநாவுக்கரசு தம்பிரான், திருஞானசம்பந்த தம்பிரான், மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் உட்பட தம்பிரான் சுவாமிகள், சைவவேளாளர் சங்க மாநில தலைவர் பண்ணைசொக்கலிங்கம், நகர மன்ற தலைவர் செல்வராஜ், டாக்டர் ராஜசேகர் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பட்டினப்பிரவேசம் ஏற்பாடுகளை ஆதீன பொது மேலாளர் ரங்கராஜன் கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி மற்றும் ஆதீன கோவில்களின் சிப்பந்திகள் செய்திருந்தனர். பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பல்லாயிரக்கணக்கானோருக்கு ஆதீனம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது