பதிவு செய்த நாள்
22
மே
2025
02:05
திருவொற்றியூர்; கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவ நிறைவு நாளில், புஷ்ப பல்லக்கில் ராஜ ராமர் அலங்காரத்தில் எழுந்தருளிய பவள வண்ண பெருமாள், மாட வீதி உலா வந்தார்.
திருவொற்றியூர், காலடிப்பேட்டை – கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சின்ன காஞ்சிபுரம் என்றழைக்கப்படும் இந்த கோவிலின், பிரமோத்சவம், 11 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான, கருடசேவை, 13 ம் தேதியும், திருத்தேர் உற்சவம், 17 ம் தேதி நடந்தது. நிறைவு நாளான நேற்று இரவு, உற்சவர் பவள வண்ண பெருமாள், ராஜ ராமர் அலங்காரத்திலும், ஸ்ரீ தேவி – லட்சுமணராகவும், பூதேவி – சீதா தேவி யாகவும் கோலம் பூண்டனர். பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு இருந்த, 20 அடி நீள புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினர். மஹாதீபாரதனை காண்பிக்கப்பட்டு, மாடவீதி உலா நடந்தது. பவள வண்ண பெருமாளை, கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என விண்ணதிர முழங்கியபடி வரவேற்றனர். தொடர்ந்து, ஐந்து நாட்களுக்கு விடையாற்றி உற்சவம் நடக்க உள்ளது.