ஆண்டிற்கு 27 நாட்கள் மட்டுமே திறக்கும் கொட்டியூர் மகாதேவர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2025 01:06
கண்ணூர், கேரளா, அக்கரை கொட்டியூர் மகாதேவர் கோவிலில் கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
அக்கரை கொட்டியூர் கோவில் ஆண்டுதோறும் ஜூன் மாதங்களில் கொட்டியூர் வைசாக மஹோத்சவத்தின் போது 27 நாட்களுக்கு திறக்கப்படும். கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் கண்ணூர் - வயநாடு நெடுஞ்சாலையிலிருந்து உட்புறமாக அடர்ந்த காடுகளுக்கிடையே அமைந்துள்ளது கொட்டியூர் மகாதேவர் கோவில். கேரள நாட்காட்டியின்படி வைகாசி மாதம், சுவாதி நட்சத்திர நாளன்று தொடங்கி ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் வரை மொத்தம் 27 நாட்கள் இங்கு வைசாக மகோற்ஸவம் நடைபெறும். இந்த நாட்களில் மட்டுமே கோவில் திறந்திருக்கும். இங்கு கோவில் கோபுரங்கள், கட்டடங்கள் என எதுவும் இல்லை. திருவிழா நடைபெறும் நாட்களில் மட்டும் தான் சிவன் சுயம்பு லிங்கத்தைச் சுற்றி குடிசை அமைக்கப்படுகிறது. மற்ற நாள்களில் வெட்டவெளியில் தான் சிவனே காட்சி தருகிறார். தற்போது துவங்கிய வைசாக மகோற்ஸவத்தில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். சிறு குடிசைகளை அமைத்து தங்கி, சிவ தரிசனம் செய்து வருகின்றனர்.