பதிவு செய்த நாள்
13
ஜூன்
2025
10:06
திருப்பூர்; வைகாசி விசாக தேர்த்திருவிழா, தெப்போற்சவத்தில் நேற்று, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவீரராகவப்பெருமாள், தெப்பக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தை வலம் வந்து அருள்பாலித்தார்.
திருப்பூரில், ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த் திருவிழா, கடந்த 2ம் தேதி துவங்கி நடைபெற்றுவருகிறது. கடந்த 9ம் தேதி, விஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டமும்; 10ம் தேதி, வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டமும் நடைபெற்றது. தேர்த்திருவிழாவின், 10ம் நாள் நிகழ்ச்சியாக, நேற்று தெப்போற்சவம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், விநாயகர், விசாலாட்சியம்மன், சோமாஸ்கந்தருக்கு சிறப்பு அபிஷேக மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில், தெப்ப உற்சவம் நடைபெற்றது. தெப்பக்குளம், பன்னீர், வெட்டிவேர், ரோஜா இதழ்கள் மற்றும் வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீதேவி, பூதேவி, வீரராகவப்பெருமாள் உற்சவர்கள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, தெப்பத்தின் மத்தியில் உள்ள, நீராழி மண்டபத்தை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தெப்போற்சவத்தை காண பக்தர்கள் குவிந்தனர்.
இன்று மகா தரிசனம்; தேர்த்திருவிழாவின், 11வது நாளான இன்று, மகா தரிசன பூஜைகள் நடக்கிறது. நடராஜ பெருமான், சிவகாமியம்மன் சப்பரங்களில் எழுந்தருளி, திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். முன்னதாக, பிச்சாண்டவராக சிவபெருமான் திருவீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை மஞ்சள் நீர் விழா, மலர் பல்லக்கு நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (15ம் தேதி), கோவில் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர் ஏற்பாட்டில், விடையாற்றி உற்சவத்துடன், வைகாசி விசாக தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.