பதிவு செய்த நாள்
13
ஜூன்
2025
12:06
சோழவந்தான், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஜூன் 2ல் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. ஜூன் 10ல் பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத் தனர். முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் (ஜூன் 11) பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. காலையில் பஸ்ஸ்டாண்ட் அருகே மந்தை களம் சுத்தம் செய்யப்பட்டு பூஜைகள் செய்து தயார் செய்யப்பட்டது. மாலை 5:00 மணிக்கு அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு பூக்குழி இறங்கும் இடத்திற்கு வந்தார். அர்ச்சகர் சண்முகம் வைகை ஆற்றில் இருந்து கரகம் முதலில் எடுத்து வந்து தொடர்ந்து பக்தர்கள் இறங்கினார். ஏராளமான அலகுகுத்தி, கையில் குழந்தையுடன், தீச்சட்டி ஏந்தி, பால்குடம் எடுத்து, பூக்குழியில் இறங்கினர்.
திட்டமிடல் இல்லாத ஏற்பாடு; பூக்குழி இறங்குமிடம் சிறிதாக உள்ள நிலையில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் கூடினர். இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் பெண்கள் குழந்தைகள், முதியோர் சிரமப்பட்டனர். வெளியேறும் பகுதியில் தடுப்புகள் அமைக்காததால் நெரிசல் அதிகமானது. பக்தர்கள் எளிதாகச் செல்ல பாதை போதுமானதாக இல்லை. அலகுகுத்தி வந்த பக்தர்கள் சிரமப்பட்டனர். பூக்குழியில் விழுந்து காயமடைந்தோரை கொண்டு செல்லதாமதம் ஏற்பட்டது. வளாகத்திற்குள் கோயில் நிர்வாகம் அனுமதித்த பணியாளர்களை தவிர வேறுபலரும் நின்றிருந்தனர். பூக்குழியை பார்க்கும் ஆவலில் வெளியே நின்ற பக்தர்களுக்குள் நெரிசல் ஏற்பட்டது. வரும் காலங்களில் இது போன்ற குறைகள் சரிசெய்யப்பட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.