பதிவு செய்த நாள்
13
ஜூன்
2025
02:06
திருப்பூர்; ஸ்ரீ விஸ்வேஸ்வர, வீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த் திருவிழா மஹா தரிசனத்தில் பிட்சாடனர் கோலத்தில் சுவாமிகள் திருவீதிவுலா நடந்தது.
திருப்பூரில், ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த் திருவிழா, கடந்த 2ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 9ம் தேதி, விஸ்வேஸ்வர சுவாமி தேரோட்டமும்; 10ம் தேதி, வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டமும் நடைபெற்றது. தேர்த்திருவிழாவின், 10ம் நாள் நிகழ்ச்சியாக, நேற்று தெப்போற்சவம் நடந்தது. தேர்த்திருவிழாவின், 11வது நாளான இன்று, மகா தரிசன பூஜைகள் நடைபெற்றது. நடராஜ பெருமான், சிவகாமியம்மன் சப்பரங்களில் எழுந்தருளி, திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முன்னதாக, பிச்சாண்டவராக சிவபெருமான் திருவீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை மஞ்சள் நீர் விழா, மலர் பல்லக்கு நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (15ம் தேதி), கோவில் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர் ஏற்பாட்டில், விடையாற்றி உற்சவத்துடன், வைகாசி விசாக தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.
ஞான மார்க்கம் காட்டும் பிட்சாடனர் கோலம்; பக்தர்களுக்கு ஞானம் அளிப்பதற்காக, சிவபெருமான் இன்று யாசகம் பெறும் கோலத்தில் திருவீதியுலா சென்று அருள்பாலித்தார். வியாபாரிகள் நாணயம் மற்றும் பணத்தையும், பொதுமக்கள் அரிசியையும் செலுத்தினர். அகந்தை, ஆணவம், பொறாமை போன்ற தீய குணங்களையும், ஆசை, பாசம் முதலியனவற்றை, பக்தர்களிடம் இருந்து யாசகமாக பெறும் சிவபெருமான் இன்று காலை, 10:00 மணிக்கு, ‘பிட்சாடனர்’ கோலத்தில் திருவீதியுலா வந்து காட்சியருளினார். ‘சிவபெருமானை, பிட்சாடனராக தரிசனம் செய்வதும், யாசகமிடுவதும் வறுமையை நிரந்தரமாக போக்கும்; ஞானமார்க்கத்தை காட்டும்’ என, சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.