பதிவு செய்த நாள்
13
ஜூன்
2025
04:06
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே நடுவிக்கோட்டை மேலையூரில் மல்லன் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
கல்லல் ஒன்றியம் நடுவிக்கோட்டை மேலையூரில் மல்லன் கருப்பர் கோயிலில் 1999,2013 ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தற்போது மீண்டும் மல்லன் கருப்பர், பெரியகருப்பர், சின்னக்கருப்பர், தொட்டிச்சி, சன்னாசி, ராக்கச்சி, செட்டிச்சி, முன்னோடி ஆகியோர் சன்னதிகளுக்கு திருப்பணி நடந்துள்ளது.திருப்பணி நிறைவானதை அடுத்து கோயில் முன்பாக கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை அமைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. விழாக்குழுவினர் சீர் எடுத்து வந்தனர். பின்பு மாலையில் முதற்கால யாகபூஜைகள் நடந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. இன்று காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை துவங்கியது. பூர்ணாகுதி தீபாராதனைக்கு பின் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடானது. கோயிலை வலம் வந்த கலசங்கள் கோபுரம்,விமானத்திற்கு சென்றது. தொடர்ந்து காலை 10:21 மணிக்கு தொடர்ந்து சிவாச்சாரியரால் கலசங்களில் புனித நீரால் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை நடந்தது. அடுத்து, மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. சுற்று வட்டாரக்கிராமத்தினர் பங்கேற்றனர்.