பதிவு செய்த நாள்
16
ஜூன்
2025
10:06
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானை தரிசித்து செல்கின்றனர்.
திருக்குளம் என்கிற சரவணபொய்கையில் இருந்து மலைப்படிகள் வழியாக பக்தர்கள் ஏறி, இறங்கும் கோவில் தேர்வீதி நுழைவு பகுதியில் கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தில் சரஸ்வதி, பிரம்மா, முருகர் உட்பட பல்வேறு சுவாமி சிலைகள் உள்ளன. இந்த கோபுரத்தை கோவில் நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்நிலையில், கோபுரத்தை முறையாக பராமரிக்காததால், கோபுரத்தில் உள்ள சரஸ்வதி தேவியின் தலைப்பகுதி முழுதும் தேசமடைந்துள்ளது. மேலும், அதே கோபுரத்தில் உள்ள பிரம்மா தேவியின் இடது கை சேதமடைந்துள்ளது. மேலும், கோபுரத்தில் மீதமுள்ள சிலைகளும் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து வருகிறது. முருகன் கோவில் கோபுரத்தில் சிலைகள் சேதமடைந்துள்ளதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சேதமடைந்த சிலைகளை சீரமைக்க வேண்டும் என, கோவில் நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காமல் கோவில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
நேற்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலை 6:00 மணி முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்தனர். பெரும்பாலான பக்தர்கள் கார், வேன், பேருந்து போன்ற வாகனங்களில் மலைக்கோவிலுக்கு வந்தனர். மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களை தவிர, மீதமுள்ள அனைத்து வாகனங்களும் மலைப்பாதையில் செல்ல தடை விதித்தனர். இதனால், பொதுவழியில் இரண்டு மணி நேரமும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டில் ஒன்றரை மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர். முன்னதாக, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடந்தது. தேர்வீதியில் இருந்து மலைப்படிகள் வழியாக பக்தர்கள் கீழே இறங்கும் மற்றும் ஏறும் பகுதியில் உள்ள கோபுரத்தில் சேதமடைந்த சிலைகளை சீரமைத்து, வர்ணம் தீட்டுவதற்கு அனுமதி கோரி, ஹிந்து அறநிலைய துறை ஆணையருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளோம். சேதமடைந்த சிலைகள் விரைவில் சீரமைக்கப்படும். – கோவில் அதிகாரி, திருத்தணி.