மதுராந்தகம்; மதுராந்தகம் அடுத்த அருங்குணம் ஊராட்சியில், நுாறாண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, அக்னி வசந்த உத்சவம், கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, தினமும் மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, மஹாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. கடந்த 10 நாட்களாக இரவு 9:00 மணிக்கு, ஜலக்கிரிடை , சுமத்திரை திருமணம், பகடை ஆடுதல், துகில் உரிதல், அபிமன்யூ சண்டை, அர்ஜூனன் தபசு, கர்ணன் போர் என மஹாபாரத தெருக்கூத்து நாடகம் நடந்தது. நேற்று, காலை 10:00 மணிக்கு அரவான் களபலி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. பின் திரவுபதி அம்மனுக்கு, கூந்தல் முடித்து, பூச்சூட்டும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. பூங்கரகம் அலங்கரித்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்த பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.