பதிவு செய்த நாள்
16
ஜூன்
2025
10:06
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாநகர பகுதியில் உள்ள வைணவத் கோவில்களில், 25 கருட சேவை ஒரே இடத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபா ஆகியவை சார்பில் 91ம் ஆண்டாக நடைபெறும் இந்த விழா நேற்று தொடங்கியது. இதில், வெண்ணாற்றங்கரை ஸ்ரீ நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்குத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது. பின்னர், வெண்ணாற்றங்கரையிலிருந்து இன்று (16ம் தேதி) காலை 6 மணியளவில் திவ்யதேச பெருமாளுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு, 7 மணி முதல் 12 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜ வீதிகளில் வீதி உலா நடைபெற்றது. இதில், நீலமேகப் பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்றப் பெருமாள், வேளூர் வரதராஜ பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், யாதவ கண்ணன், கொண்டிராஜ பாளையம் யோக நரசிம்ம பெருமாள், கோதண்டராமர், கீழ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள் உள்பட 25 கோவில்களிலிருந்து பெருமாள் எழுந்தருளி ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். இதைத்தொடர்ந்து, 17ம் தேதி காலை நவநீத சேவை நடைபெறவுள்ளது. இதில், வெண்ணாற்றங்கரையில் 17ம் தேதி காலை 6 மணியளவில் புறப்பட்டு காலை 7 மணி முதல் 10:30 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய பகுதிகளில் வீதி உலா நடைபெறும். இதில், 16 கோவில்களிலிருந்து பெருமாள் சுவாமிகள் எழுந்தருளி, ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கவுள்ளனர். வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் ஜூன் 18ம் தேதி காலை 9:00 மணியளவில் விடையாற்றி உற்சவம் நடைபெறவுள்ளது.