பதிவு செய்த நாள்
16
ஜூன்
2025
12:06
காஞ்சிபுரம்; பெரிய காஞ்சிபுரம் திரவுபதியம்மன் கோவில் அக்னி வசந்த மஹாபாரத பெருவிழாவின், அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நாளை காலை நடக்கிறது. பெரிய காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதி கிழக்கு பகுதி, பூக்கடை சத்திரம் அருகில் தர்மராஜர் சமேத திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அக்னி வசந்த மஹாபாரத விழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, தினமும், மதியம் 2:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் கோவிந்தராஜ் மஹாபாரத சொற்பொழிவாற்றி வருகிறார். முனுசாமி கவி வாசித்து வருகிறார். விழாவில் மற்றொரு நிகழ்வாக, கடந்த 12ம் தேதி முதல், தினமும், இரவு 10:00 மணிக்கு ரேணுகாம்பாள் கட்டை கூத்து நாடக மன்றத்தின் ஆசிரியர் சீதாராமன் குழுவினரின் மஹாபாரத நாடகம் நடந்து வருகிறது. இதில், 16ம் நாள் விழாவான நாளை, காலை 7:00 மணிக்கு அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடக்கிறது. இதில், அர்ச்சுனன் வேடமிட்ட நாடக கலைஞர் தபசு மரத்தில் ஏறி சிவனை வேண்டி தவம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி, 35 அடி நீள தபசு மரம், வையாவூர் ஜம்போடை கன்னியம்மன் கோவிலில் பூஜிக்கப்பட்டு, ஊர்வலமாக திரவுபதியம்மன் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு, பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. வரும் 22ம் தேதி காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதி திருவிழாவும் நடக்கிறது.