பதிவு செய்த நாள்
16
ஜூன்
2025
01:06
திருப்பூர்; நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஆனி மாத தேர்த்திருவிழா கொண்டாட, சுவாமிமலையில் வடிவமைக்கப்பட்ட பஞ்சலோக சிலைகள் எடுத்துவரப்பட்டன. நல்லுாரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடத்த, அறங்காவலர்கள் குழு மற்றும் பக்தர்கள் முடிவு செய்தனர். புதிய தேர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆறு மாதமாக, தேர் ஸ்தபதிகள் விஸ்வேஸ்வரர் தேர் மற்றும் விநாயகர் தேர்களை வடிவமைத்தனர்; தேர் வெள்ளோட்டம், ஏப்., 30ல் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும், ஆனி உத்திர நட்சத்திர நாளில் தேரோட்டம் நடைபெறும் வகையில், தேர்த்திருவிழா நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்காக, சுவாமி மலையில், புதிதாக பஞ்சலோக சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோவிலில், விநாயகர், சந்திரசேகரர், ஆனந்த வல்லி தாயார், சூலதேவர் உள்ளிட்ட சிலைகள் உள்ளன. தேர்த்திருவிழா நடத்த, சோமாஸ்கந்தர் சிலை புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இடையே பாலமுருகனை வைத்துள்ளபடியான, சோமாஸ்கந்தர் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. பிட்சாடனர் சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.