பதிவு செய்த நாள்
16
ஜூன்
2025
01:06
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, விடையாற்றி உற்சவத்துடன் நேற்று நிறைவடைந்தது. வைகாசி விசாக தேர்த்திருவிழா, 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, யாகசால பூஜைகள், பல்வேறு சமுதாயத்தினரின் மண்டப கட்டளை பூஜை, உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வாகன காட்சி என, விழா களைகட்டியது. கடந்த 7ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 8ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து, 9ம் தேதி விஸ்வேஸ்வர சுவாமி தேரோட்டமும், 10ம் தேதி வீரராகவப்பெருமாள் தேரோட்டமும் கோலாகலமாக நடந்தது. வண்டித்தாரை, பரிவேட்டை, தெப்பத்தேர் உற்சவம், மஹா தரிசனம், மஞ்சள் நீர் உற்சவ பூஜைகள், மலர் பல்லக்கு ஊர்வல காட்சிகள் நடந்தன; நேற்று, கோவில் பட்டாச்சார்யார்கள், சிவாச்சார்யார்கள் விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. திருவிழா சிறப்பாக நடைபெற்றதற்கு நன்றி கூறும் வகையில், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது.