பதிவு செய்த நாள்
16
ஜூன்
2025
01:06
ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் தமிழ்நாடு வி.எச்.பி., சார்பில் கிராம கோயில் பூஜாரிகளுக்கு ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம் துவங்கியது. தமிழ்நாடு வி.எச்.பி., சார்பில் நேற்று ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் 55வது பூஜாரிகளுக்கான ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம் துவங்கியது. முகாமில் கிராம கோயில் சன்னதியில் மந்திரங்கள், அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகள் குறித்து பயிற்சி அளித்து தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம் பாடல்கள் கற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இம்முகாம் ஜூன் 29 வரை நடக்க உள்ளது. துவக்க விழாவில் பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு வி.எச்.பி., மாநில இணை அமைப்பு செயலாளர் பெருமாள், மாநில இணை பொதுச் செயலாளர் விஜயகுமார், வழக்கறிஞர் ஜெகன், மாநில இணை பொது செயலாளர் ராமசுப்பு, ராமநாதபுரம் மண்டல அமைப்பாளர் சரவணன், சேவா பாரதி மாவட்ட துணை தலைவர் சுடலை, பலர் பங்கேற்றனர். முகாமில் நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதியில் இருந்து 120 கிராம கோயில் பூஜாரிகள் பயிற்சி பெற்றனர்.