பதிவு செய்த நாள்
16
ஜூன்
2025
05:06
பல்லடம்; செஞ்சேரிமலை முருகன் கோவிலில் ஓராண்டுக்கு முன் சேதமடைந்த முருகன் சிலையை புனரமைப்பதில் அறநிலையத்துறை சுணக்கம் காட்டி வருவதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் செஞ்சேரிமலை முருகன் கோவில் உள்ளது. மூலவராக மந்திரகிரி வேலாயுத சுவாமி அருள்பாலிக்கிறார். வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில், வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்கள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கிருத்திகை, சஷ்டி, பிரதோஷம் உட்பட, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை வழிபட்டு செல்கின்றனர். வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில், படிக்கட்டுகள் வழியாக மலைக்குச் செல்லும் வழியில் குழந்தை குமாரர் கோவில் உள்ளது. இதிலுள்ள முருகன் சிலை கடந்த ஓராண்டுக்கு முன் சேதப்படுத்தப்பட்டது. இதில், முருகன் சிலையின் வலது கை மற்றும் மயிலின் தலையும் உடைபட்டது. இச்சம்பவம் நடந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும், சிலை புனரமைக்கப்படாதது பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், மனநலம் பாதித்த ஒருவரால், கடந்த ஓராண்டுக்கு முன் குழந்தை குமாரர் சிலை சேதப்படுத்தப்பட்டது. சிலை புதுப்பிக்கப்படாமல் இருந்த நிலையில், ஆறு மாதத்துக்கு முன் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, அறநிலையத்துறை இணை கமிஷனர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு சிலையை புதுப்பிக்க உத்தரவிட்டார். உபயதாரர்கள் உடனடியாக சிலையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதன்படி, புதிய சிலை தயாராகி நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும், சிலையை பிரதிஷ்டை செய்யாமல், பழைய உடைந்த சிலையை அகற்றாமலும் அறநிலையத்துறை அலட்சியம் காட்டி வருகிறது. உடைந்த சிலையை உடனடியாக அகற்றி, தயாராக உள்ள புதிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்ய அறநிலையத்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.