நெற்குணம் ஆளுடைய நாயனார் கோவிலில் திருப்பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2025 05:06
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த நெற்குணம் ஆளுடைய நாயனார் கோவில் பாலாலய திருப்பணி நடந்தது.
அரகண்டநல்லூர் அருகே உள்ளது நெற்குணம் கிராமம். தென்பெண்ணை நதிக்கரையில் அமைந்துள்ள அழகிய கிராமம். கிராமத்தின் பழமையை பறைசாற்றும் வகையில் நதியை ஒட்டி சிதிலமடைந்த அருள்மிகு ஆளுடைய நாயனார் திருக்கோவில் உள்ளது. கோவில் முழுவதுமாக சிதிலமடைந்து விட்டாலும், மூலவர் சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கல்வெட்டுகள் நிறைந்திருந்தாலும் இதன் தொன்மை, வரலாறு பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரியவில்லை. சிவபெருமானின் அருளை அடைந்து பக்தி மற்றும் துறவரவியல் வாழ்வை முன்னெடுத்த நாயனாரின் நினைவாக நிறுவப்பட்ட கோவில் என்பது செவி வழி செய்தியாக உள்ளது. பழமையும் பெருமையும் வாய்ந்த இக்கோவிலை புனரமைத்து வழிபாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை நிதி ஒதுக்கி திருப்பணி செய்ய பாலாலய வைபவம் இன்று காலை நடந்தது. அறங்காவல் குழு உறுப்பினர் மாலதி, ஆய்வாளர் பாலமுருகன், செயல் அலுவலர் அறிவழகன், ஊர் முக்கியஸ்தர் ரகோத்தமன், எழுத்தர் மிரேஷ்குமார் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.