சக்தி வாய்ந்த தொட்டபல்லாபூர் முத்தியாலம்மன் கோவில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2025 11:06
பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூரில் காட்டி சுப்பிரமணியா உட்பட ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் உள்ளன. இதில் பழமையான முத்தியாலம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் துர்கா அல்லது முத்தியாலம்மாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருந்தால் நீங்கும். வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம்.
பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்து சென்றால், பெண் குழந்தை பிறக்கும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். கோவிலில் ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. தொட்டபல்லாபூர், சிக்கபல்லாபூர், எலஹங்கா, தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் தினமும் சாமி தரிசனம் செய்ய இங்கு வந்து செல்கின்றனர்.
முத்தியாலம்மன் மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் என்றும், அம்மனை தரிசனம் செய்து சென்றால் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கும் என்றும்; கோவிலுக்கு சென்று வந்தால் வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறது என்றும் பெண் பக்தர்கள் கூறுகின்றனர். பழமையான கோவில் என்றாலும் கோவில் நிர்வாகம் நன்கு பராமரித்து வைத்துள்ளது. செவ்வாய், வெள்ளி கிழமைகளில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கோவிலின் நடை தினமும் காலை 6:30 மணி முதல் பகல் 11:30 மணி வரையும்; மாலை 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் திறந்திருக்கும்.
மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து தொட்டபல்லாபூருக்கு அடிக்கடி பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் நம்பர் 285 எம். கோவிலில் முன்பு வாகனங்களை நிறுத்துவதற்கும் விசாலமான பார்க்கிங் வசதி உள்ளது.