பதிவு செய்த நாள்
17
ஜூன்
2025
11:06
பலரும் தங்கள் கஷ்டம் மற்றும் தோஷ நிவர்த்தி செய்வதற்காக, எங்கெங்கோ அலைகின்றனர். இதற்காக அதிகம் பணத்தை செலவிடுகின்றனர். பிரசித்தி பெற்ற கோவில்களுக்குச் செல்கின்றனர். ஆனால் உள்ளங்கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு, நெய்க்கு அலைவதாக பழமொழி உள்ளது. நம் சுற்றுப்புற கிராமங்களிலேயே, அதிக சக்தி வாய்ந்த கோவில்கள் இருப்பது, பலருக்கும் தெரிவது இல்லை. இத்தகைய அற்புத கோவில்களில், கெட்டவாடி கிராமத்தில் உள்ள முருகன் கோவிலும் ஒன்று. மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகாவின், கெட்டவாடி கிராமத்தில், இக்கோவில் அமைந்துள்ளது. இது புராதன கோவில் இல்லையென்றாலும், அதிக சக்தி வாய்ந்தது.
கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு, சுப்ரமண்ய சுவாமிகள் என்பவர், இந்த இடத்தில் நிலம் வாங்கினார். நிலம் வாங்கிய சில நாட்களில், இங்கு பிரமாண்டமான புற்று தோன்றியது. இதை கண்டு ஆச்சர்யம் அடைந்த கிராமத்தினர், புற்றை பக்தியுடன் பூஜிக்க துவங்கினர். இங்கு வந்து தரிசனம் செய்த பலருக்கும், வாழ்க்கையில் நன்மைகள் நடந்தன. குடும்பத்தில் பிரச்னை காணாமல் போனது. அதன்பின் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இங்கு சுப்ரமண்ய சுவாமியுடன், பொது மக்களும் பணம் செலவிட்டு அழகான கோவில் கட்டினர். 18 அடி உயரமான முருகன் சிலை வடிவமைத்தனர். சிலை, ஒரே கல்லில் அற்புதமாக செதுக்கப்பட்டது. பெங்களூரை சேர்ந்த சிற்பி ஒருவர் இதை செதுக்கியுள்ளார். கோவில் அமைந்துள்ள இடம், ஆன்மிக தலமாக மாறுகிறது.
வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில், சிறப்பு பூஜை நடக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வசதியும் செய்யப்படுகிறது. தோஷ நிவர்த்தி பூஜைகள் நடக்கின்றன. ஆஷ்லேஷ பூஜை, சர்ப்ப சாந்தி ஹோமம், காளிங்க சர்ப்ப நிவாரண பூஜைகளும் நடத்தப்படுகின்றன. தோஷ நிவர்த்தி பூஜைகளை தனியாகவும் செய்யலாம். கூட்டாக செய்யவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
கெட்டவாடி கிராமத்தில் கட்டப்பட்ட கோவிலை கண்டால், குக்கே சுப்ரமண்யர் கோவிலை தரிசித்த அனுபவம் கிடைக்கும். செவ்வாய்க் கிழமைகள் தவிர, மற்ற நாட்களில் காலை 6:00 மணி முதல், 10:00 மணி வரை திறந்திருக்கும். செவ்வாய்க் கிழமையன்று காலை முதல் மாலை வரை திறந்திருக்கும். கஷ்டம் என, தன்னை தேடி வந்த மக்களை எப்போதும் சுப்ரமண்யர் கைவிட்டது இல்லை என, பக்தர்கள் கூறுகின்றனர். இங்கு குடிகொண்டுள்ள முருகனின் சக்தியை உணர்ந்து, வெளி மாவட்டங்களில் இருந்தும், பக்தர்கள் வருகின்றனர். முருகனின் அருளை பெறுகின்றனர்.
எப்படி செல்வது?
மைசூரின் நஞ்சன்கூடில், கெட்டவாடி கிராமத்தில் சுப்ரமண்யர் கோவில் உள்ளது. பெங்களூரில் இருந்து 167 கி.மீ., மைசூரில் இருந்து, 23 கி.மீ., தொலைவில் நஞ்சன்கூடு உள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து நஞ்சன்கூடுக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன.தனியார் பஸ்கள், வாடகைக் கார்களும் இயக்கப்படுகின்றன. விமானத்தில் வருவோர், மைசூரு விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ்கள் அல்லது வாடகை வாகனங்களில், கோவிலுக்கு வரலாம்.