பதிவு செய்த நாள்
17
ஜூன்
2025
01:06
புதுச்சேரி; பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா சிறப்பு பூஜை இன்று நடைபெற்றது.
புதுச்சேரி–திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், பஞ்சவடீயில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் இன்று கும்பாபிஷேக ஆண்டு விழா சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி ஸ்ரீவாரி சீனிவாசப் பெருமாள் சன்னதிக்கு பின்புறம் அமைந்துள்ள யாக சாலையில் கடம் பிரதிஷ்டை செய்து சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, வலம்புரி மகா கணபதி, சீதா சமேத பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி மற்றும் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம் போன்ற மங்கள திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து, அனைத்து சன்னதிகளிலும் கலாசாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் அனைத்து சன்னதிகளிலும் மகா தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக ஆண்டு சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.