பதிவு செய்த நாள்
17
ஜூன்
2025
04:06
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் சிறப்பு வழியில் தரிசிக்க அனுமதி கோரி உள்ளூர் பக்தர்கள் கோயிலுக்குள் நுழைய முயன்றதும், போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் உள்ளூர் பக்தர்கள் மறியல் செய்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பாரம்பரியமாக உள்ளூர் பக்தர்கள் சிறப்பு வழியில் தரிசித்து வந்தனர். ஆனால் கடந்த இரு மாதமாக உள்ளூர் பக்தர்கள் ரூ.200 கட்டண வரிசையில் செல்லும்படி கோயில் நிர்வாகம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் பக்தர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரம் மக்கள் பாதுகாப்பு பேரவையினர் இன்று காலை 10 மணிக்கு ராமேஸ்வரம் கோயில் மேலவாசல் வழியாக ஆலய பிரவேசம் போராட்டம் செய்தனர். ஆனால் மேலவாசல் முன்பு தடுப்பு வேலிகள் அமைத்து ராமநாதபுரம் ஏ.டி.எஸ்.பி., சுப்பையா, ராமேஸ்வரம் டி.எஸ்.பி., சாந்தமூர்த்தி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பில் இருந்தனர். இதில் உள்ளூர் பக்தர்கள், அ.தி.மு.க., பா.ஜ., இடதுசாரிகள், காங்., உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சி நிர்வாகிகள் என 500க்கு மேலானோர் திரண்டதால், போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் உள்ளூர் பக்தர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மேலவாசல் முன்பு சாலை மறியல் செய்தனர். பின் 130 பேரை போலீசார் கைது செய்து பஸ்ஸில் ஏற்றி சென்றனர். இதனால் திட்டக்குடி, கோயில் மேலவாசல், அக்னி தீர்த்தம் கடற்கரை வரை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.