பதிவு செய்த நாள்
17
ஜூன்
2025
05:06
ஓசூர்; ஓசூர் அருகே, பெரிய கரகதம்மா தேவி கோவில் திருவிழாவையொட்டி, ஊர்மக்கள் சார்பில், 10,000 பேருக்கும், தி.மு.க., – எம்.எல்.ஏ., பிரகாஷ் சார்பில், 35,000 பேருக்கும் அசைவ விருந்து பறிமாறப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பெரிய நல்லுார் கிராமத்தில், பெரிய கரகதம்மா தேவி, சின்ன கரகதம்மா தேவி கோவில் உள்ளது. ஓசூர், தி.மு.க., – எம்.எல்.ஏ., பிரகாஷ் உட்பட, 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இக்கோவில் குலதெய்வமாக உள்ளது. இக்கோவிலில் கடந்த, 18 ஆண்டுகளாக திருவிழா நடக்கவில்லை. கோவில் மிகவும் சிதிலமடைந்திருந்ததால், எம்.எல்.ஏ., பிரகாஷ் ஏற்பாட்டில் கடந்தாண்டு கோவில் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து இக்கோவில் கரக மகோத்சவம் மற்றும் ஊர் பண்டிகை திருவிழா நேற்று துவங்கியது. கிராம தேவதைகளாகிய சவாரம்மா தேவி, கங்கம்மா தேவி, மாரியம்மன், சாக்கம்மா தேவிகளுக்கு தீபாராதனை, இரவு, 8:00 மணிக்கு தொட்ட கரகதம்மா தேவி, சின்ன கரகதம்மா தேவியின் கரக மகோத்சவம் நடந்தது.
விழாவையொட்டி இன்று காலை கோவில் வளாகத்தில் பக்தர்கள், 500க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி, உறவினர்களுக்கு அசைவ விருந்து பரிமாறினர். இதில், 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். எம்.எல்.ஏ., பிரகாஷ் சார்பில், 350க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு, 5 டன் ஆட்டிறைச்சி மற்றும் 3 டன் கோழி இறைச்சியில், அசைவ விருந்து சமைக்கப்பட்டது. ஒரே நேரத்தில், 2,000 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டது. ஓசூர், தளி, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி, தி.மு.க.,வினர் மட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் வந்திருந்த, 35,000க்கும் மேற்பட்டோர், அசைவ விருந்தை சாப்பிட்டனர். இதில், மட்டன் பிரியாணி, சிக்கன் குழம்பு, தலைக்கறி, குடல் கறி, மட்டன் குழம்பு, இட்லி, களி உருண்டை, பாயாசம், சாப்பாடு, ரசம் உள்ளிட்டவை பரிமாறப்பட்டன. நேற்று சஷ்டி என்பதால், அசைவம் சாப்பிடாத மக்களுக்கு, சைவ உணவும் பறிமாறப்பட்டது. அசைவ விருந்திற்கு மக்கள் படையெடுத்ததால், நல்லுார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி மாலையில், கொள்ளீரண்ணா கோவிலில் நெய் தீபம் ஏற்றப்பட்டது.