பதிவு செய்த நாள்
18
ஜூன்
2025
10:06
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், புதியதாக கட்டப்பட்ட பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் மற்றும் பொருட்கள் பாதுகாப்பு அறை கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பக்தர்களின் வசதிக்காக, 82 லட்சம் ரூபாய் மதிப்பில், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் மற்றும் 39.5 லட்சம் ரூபாய் மதிப்பில், பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் காலணிகள் பாதுகாப்பு மையம் கட்டும் பணி கடந்தாண்டு துவங்கப்பட்டது. தற்போது பணிகள் முடிவடைந்தது. இந்நிலையில், இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் புதியதாக கட்டப்பட்ட பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் காலணிகள் பாதுகாப்பு மைய கட்டடத்தை திறந்து வைத்தார். கோவிலில் நடந்த விழாவில், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.