பதிவு செய்த நாள்
18
ஜூன்
2025
11:06
புவனகிரி; புவனகிரி அருகே மருதுாரில், 3 கோடியே 50 லட்சத்தில் வள்ளலார் அவதார இல்லம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது.
கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த மருதுாரில் வள்ளலார் அவதார இல்லம் உள்ளது. இந்த இல்லத்தை பழமை மாறாமல் புதிதாக கட்ட வேண்டும் என, பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் பேரில், தமிழக அரசு, ஆணையர் பொது நிதி ரூ. 3 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கி டெண்டர் விட்டது. அதையடுத்து, பணியை துவக்க இல்லத்தில் இருந்த வள்ளலார் அணையா ஜோதியை கடந்த மாதம் 4ம் தேதி இடமாற்றம் செய்தனர். பழைய இடத்தில் இருந்த கட்டடம் முற்றிலும் இடித்து அகற்றிய நிலையில் நேற்று காலை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம், புதிய கட்டடம் கட்ட முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அதையடுத்து, மருதுாரில் அவதார இல்லம் கட்ட பூமி பூஜை நடந்தது. அகவற்பா இசைக்கப்பட்டு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. வடலுார் நகர்மன்ற தலைவர் சிவக்குமார், சிதம்பரம் கவுன்சிலர் சேகர், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஜோதி, புவனகிரி மத்திய ஒன்றிய செயலாளர் வெற்றிவேல், வடலுார் நகர செயலாளர் தமிழ்ச்செல்வம், மாவட்டத் துணை அமைப்பாளர் முத்து முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., மருதுார் ராமலிங்கம் தலைமை தாங்கினார். பொதுப்பணி துறை பொறியாளர் மணிவண்ணன், பி..டி.ஓ., சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். செயல் அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.