பதிவு செய்த நாள்
19
ஜூன்
2025
11:06
மதுரை:திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவில் புனரமைப்பு பணிக்கு, கேரள சம்பிரதாய ஆகம நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும். இல்லையெனில், கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்க வேண்டும் என தாக்கலான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூலை 7ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இக்கோவில் மலையாள தாந்திரீகம் ஆகமத்தை பின்பற்றக்கூடியது. கேரளா முட்டவிளை மடம் தந்திரி சுப்பிரமணியரு தான் தலைமை ஆன்மிக குரு.கும்பாபிஷேகத்திற்கு புனரமைப்பு பணி மேற்கொள்ள அறநிலையத் துறை அமைத்த குழுவில் சைவம், வைணவ ஆகம நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள், மலையாள தாந்திரீக ஆகமத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அல்ல. அந்த ஆகம நிபுணர்கள் குழுவில் இடம்பெறவில்லை. கேரள சம்பிரதாய ஆகம நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும். இல்லையெனில் கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.கோவில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மாநில அளவில் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அனுமதியுடன் திருச்செந்துார் கோவிலில் புனரமைப்பு பணி நடக்கிறது. பெரும் பகுதி பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது என்றார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஏற்கனவே நிபுணர் குழு அமைத்து புனரமைப்பு பணி நடக்கிறது. இதனால் இவ்வழக்கில் மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றுவதில் விதிமீறல் இருந்தால் அறநிலையத்துறையிடம் நிவாரணம் தேடலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மறுசீராய்வு மனு நிலுவை; திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேக நேரத்தை மாற்ற உத்தரவிடக் கோரி, ஏற்கனவே ஒரு வழக்கு தாக்கலாகி இருந்தது.அதை விசாரித்த உயர் நீதிமன்றம், சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தி உட்பட ஐந்து பேர் அடங்கிய குழு, கும்பாபிஷேகம் நடத்த எந்த நேரம் உகந்தது என்பது குறித்து விவாதிக்க வேண்டும். அந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதை மறு சீராய்வு செய்யக்கோரும் மனு நிலுவையில் உள்ளது. திருப்பூர், வீரராகவ பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் நடைப்பெற்றது.