பதிவு செய்த நாள்
19
ஜூன்
2025
04:06
மேட்டுப்பாளையம்; சிறுமுகை அருகே தென்பொன்முடியில் அண்ணன்மார் கோவில் கும்பாபிஷேகம், 27ம் தேதி நடைபெற உள்ளது. சிறுமுகை அடுத்த பெள்ளேபாளையம் ஊராட்சி தென்பொன்முடியில், அண்ணன்மார் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று, 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிதாக மண்டபம், குதிரை வாகனம், பரிவார் சுவாமி சிலைகள் அமைத்து வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெறுகின்றன. வருகிற, 27ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக யாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. யாகசாலை, 16 அடி அகலத்திலும், 16 அடி நீளத்திலும், மூன்று வேலிகள், மூன்று குண்டங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. 26ம் தேதி மாலை விநாயகர் வழிபாடும், வாஸ்து சாந்தி பூஜையும், காப்பு கட்டுதலும், முதல் கால யாக வேள்வி பூஜையும் துவங்க உள்ளது. இரவு, 108 வகை ஹோம திரவியங்கள் சமர்ப்பணம், வேத பாராயணமும், திருமுறை விண்ணப்பம் செய்தல் ஆகியவை நடைபெற உள்ளன. 27ம் தேதி அதிகாலை திருப்பள்ளி எழுச்சியும், இரண்டாம் கால யாக வேள்வி பூஜையும், நாடி சந்தானமும் நடைபெற உள்ளது. காலை, 7:00 மணிக்கு அண்ணன்மார் சுவாமிக்கும் மற்றும் பரிவார் சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.