பிள்ளையார்பட்டியில் நாள் முழுவதும் அன்னதானம்; விரைவில் நடைமுறைப்படுத்த கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2025 05:06
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டியில் கற்பகவிநாயகர் கோயிலில் விரைவாக நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை நடைமுறைப்படுத்த பக்தர்கள் கோரியுள்ளனர்.
தமிழகத்தில் குறிப்பிட்ட சில கோயில்களில் அறநிலையத்துறையினரால் நாள் முழுவதும் அன்னதானத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. காலை, மதியம், இரவு மூன்று நேரமும் இங்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள், ஏழைகளுக்கு உணவளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில், கொடைக்கானல் பூம்பாறை முருகன் கோயில்களிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு ஏப். மாதத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. ‛நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் அறிவிப்பு எண்.9 மற்றும் 12 ன் கீழ் பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில் மற்றும் கொடைக்கானல் அருள்மிகு குறிஞ்சியாண்டவர் திருக்கோயில்களில் ஆகிய 2 திருக்கோயில்களில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 15 திருக்கோயில்களிலும் வழக்கமான உணவுடன் வடை மற்றும் பாயாசம் சேர்த்து வழங்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இத்திட்டம் இக்கோயில்களில் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் பக்தர்கள் விரைவாக இக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரியுள்ளனர்.