பதிவு செய்த நாள்
20
ஜூன்
2025
10:06
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே, 22 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட பஞ்சலோக சிலைகள், அப்பகுதி கிராம சிவன் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே சிக்காடு கிராமத்தில், அரசுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 2003ம் ஆண்டு ஜூலை மாதம் வாய்க்கால் தோண்டப்பட்டது. அப்போது சிவன், பார்வதி, சிவகாமி அம்பாள், சண்டிகேஸ்வரர், நடராஜர் ஆகிய 6 பஞ்சலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த சிலைகள், உளுந்துார்பேட்டை தாசில்தார் மூலம் கருவூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. கிராம மக்களின் பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு, 22 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த சிலைகள் சிக்காடு கிராம மக்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சிக்காடு கிராமத்தில் உள்ள ஆடிப்பூரம் அம்பிகை உடனுறை திருக்கற்றளி திருவக்கீஸ்வரமுடைய நாயனார் கோவில் நிர்வாகத்திடம் அந்த சிலைகளை ஒப்படைக்க கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். அதையடுத்து, சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங் தலைமையில் உளுந்துார்பேட்டை தாசில்தார் அனந்தகிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் சுதாகர் ஆகியோர், சிலைகளை கருவூலத்திலிருந்து பெற்று சிக்காடு கோவில் நிர்வாகி இளங்கோவிடம் முன்னிலையில் ஒப்படைத்தனர். அந்த சிலைகளுக்கு கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தது. திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.