பதிவு செய்த நாள்
20
ஜூன்
2025
10:06
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெறும் மஹா ருத்ர ஹோம பூஜையில் பங்கேற்க வந்த தருமை ஆதினத்துக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
உலக நலன் மற்றும் அமைதி வேண்டி கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையாக விளங்கும், ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் மஹா ருத்ர ஹோமம் நடந்து வருகிறது. இதில், பங்கேற்க நேற்று மாலை கோவிலுக்கு வந்த திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் 27வது குரு மஹா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு, அவிநாசி கோவில் நிர்வாகத்தினர் மற்றம் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். தொடர்ந்து அவர் மஹா ருத்ர பூஜையில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில், பெங்களூரூ வேத ஆகம சமஸ்க்ருத மஹா பாடசாலை முதல்வர் அவிநாசி சுந்தரமூர்த்தி சிவம், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், செயல் அலுவலர் சபரீஷ்குமார், அறங்காவலர் பொன்னுசாமி, விஜயகுமார் மற்றும் பாடசாலை மாணவர்கள், சிவனடியார்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.