பதிவு செய்த நாள்
20
ஜூன்
2025
05:06
ராமநாதபுரம்; போதிய மழை இல்லாத போதும் ராமநாதபுரம் அருகே கழுகூரணி கிராமத்தில் கோயிலில் ருத்ராட்சம் மரத்தில் காய்கள் காய்த்துள்ளன. ராமேஸ்வரம் வரும் பக்தர்கள், பொதுமக்கள் வணங்குகின்றனர். ருத்ராட்சம் சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகிறது. இதில் உள்ள முகங்களால் அதற்கு சிறப்பு. பெரும்பாலும் ஆறு முகம் கொண்ட ருத்ராட்சத்தை பலரும் விரும்புவர். இதுபோன்ற ருத்ராட்சம் பனி சூழ்ந்த மலைப்பகுதிகளில் தான் அதிகம் விளைகிறது. இருப்பினும் அபூர்வமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உத்தரகோசமங்கை அருகே தெய்வசிலை நல்லுாரிலும், கழுகூரணியிலும், திருவாடானை அருகிலும் ருத்ராட்ச மரங்கள் உள்ளன.
கழுகூரணி ஊர் மக்கள் கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு முன் பக்தர் ஒருவர் சித்தி விநாயகர், செந்திலாண்டவர் கோயிலில் ருத்ராட்ச மரத்தை நட்டார். குளிர் காலத்தில் பூக்கள் பூத்து, பங்குனி மாதத்தில் காய்க்கும். இங்கு பூத்து பிஞ்சாகி பின் காய்ந்து விடும். ஆனால் இந்த ஆண்டு ருத்ராட்சம் வறட்சியிலும் (ஜூன்) காய் காய்த்து வளர்ந்துள்ளது. கோயிலில் வளரும் இந்த ருத்ராட்ச மரத்திற்கு பூஜை செய்து, வணங்கி வருகிறோம். ராமேஸ்வரம் வரும் பக்தர்களும் இங்கு வந்து மரத்தை வணங்கி செல்கின்றனர் என்றனர்