பதிவு செய்த நாள்
20
ஜூன்
2025
05:06
திருவாடானை; திருவாடானை அருகே திருவெற்றியூர் கண்மாய்க்குள் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குன்னமுடைய அய்யனார் கோயில் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்துள்ளது. கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தமிழகத்தில் அய்யனார் வழிபாடு முதன்மை இடத்தில் உள்ளது. பண்டைய காலத்தில் அய்யனார் கோயில்கள் அடர்ந்த காடுகளுக்கு இடையே, வனப்பகுதியில் அமைந்திருக்கும். காலப்போக்கில் கிராமங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றனர். கிராமங்களில் எல்லைச்சாமியாய், மண்ணையும் மக்களையும் காக்கும் காவல் தெய்வமாக திகழ்பவர் அய்யனார். திருவாடானை அருகே திருவெற்றியூரில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குன்னமுடையார் அய்யனார் கோயில் உள்ளது. இக் கோயில் கண்மாய்க்குள் கட்டபட்டுள்ளது. ஆண்டுதோறும் சித்திரையில் திருவிழா நடக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கண்மாயில் தண்ணீர் தேங்கியிருப்பதால் பக்தர்கள் கோயிலுக்கு செல்லமுடியவில்லை. இதனால் விழா நடத்த முடியாமல் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து திருவெற்றியூர் மக்கள் கூறியதாவது; கோயில் கருவறையில் அய்யனார் தமது மனைவியர்களான பூர்ணா, புஷ்கலா ஆகியோருடன் காட்சியளிக்கிறார். கோயிலை சுற்றி 10 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியிருப்பதால் செல்லமுடியவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக திருவிழாவும் நடத்த முடியவில்லை. கோயிலை சுற்றி மரங்கள் அடர்ந்து பாழடைந்துள்ளது. சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன. எனவே கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தேவஸ்தான அலுவலர்கள் கூறியதாவது– திருவெற்றியூர் பாகம்பிரியாள், வாழவந்த நாயகி, கருப்பர், குன்னமுடை அய்யனார் ஆகிய கோயில்களுக்கு திருப்பணி நடத்த முடிவு செய்யபட்டுள்ளது. தொல்லியல் துறையினர் பார்வையிட்டனர். அரசு அனுமதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கும் என்றனர்.