பதிவு செய்த நாள்
20
ஜூன்
2025
05:06
திருப்பூர்; உலக நலன் வேண்டியும், தொழில் வளம் சிறக்கவும் வேண்டி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், மஹா ருத்ர வேள்வி பாராயணம் நடைபெற்றது.
பெங்களூரு வேத ஆகம சமஸ்கிருத மஹா பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் –மஹாலட்சுமி தம்பதியரின் மணிவிழாவை முன்னிட்டு, உலக நலன் வேண்டியும், தொழில்வளம் சிறக்க வேண்டியும், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், மஹாருத்ர யாகபூஜை நடந்தது. அவிநாசி சிவாச்சார்யார்கள், ஸ்ரீகுருகுலம் ஆகம வித்யார்த்திகள் என, நுாற்றுக்கும் அதிகமானோர் பங்கேற்று, மஹா ருத்ரயாக வேள்வி நடத்தினர். கடந்த, 19ம் தேதி மாலை துவங்கி, நேற்று காலை வரை நடந்தது. இன்று காலை நடந்த இரண்டாம் கால மஹா ருத்ர வேள்வியை தொடர்ந்து கலசாபிஷேகம், உலக நலன் வேண்டி பொது பிரார்த்தனை நடந்தது. ஸ்ரீமஹாதேவி ருத்ர மண்டலம், ஸ்ரீசிவ ருத்ர மண்டலம், ஸ்ரீ ஸ்ரீசங்கரருத்ர மண்டலம், ஸ்ரீநீலலோஹித மண்டலம் என, பல்வேறு மண்டலங்கள் அமைத்து, மஹாருத்ர வேள்வி பூஜையும், மகாதீபாராதனையும் நடந்தது. பூஜை நிறைவாக, தருமபுர ஆதினம் மற்றும் பிற ஆதினங்கள் பங்கேற்று வழிபட்டனர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோவில் குளத்துக்கு சென்று வழிபட்டார். தொடர்ந்து, பாதிரி அம்மன், பாதிரி மரத்தை வழிபட்டு, தல விருட்சத்தின் வரலாறுகளை கேட்டறிந்தார். மங்கள இசை, பூரண கும்ப மரியாதையுடன் சிவாச்சாரியார் கோவிலுக்குள் அழைத்துசென்றனர். அவிநாசிலிங்கேஸ்வரர், கருணாம்பிகை அம்மனை வழிபட்டு, சிவாச்சாரியார் மற்றும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.