பதிவு செய்த நாள்
21
ஜூன்
2025
08:06
விழுப்புரம்; விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால மூத்த தேவி சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.
விழுப்புரம் அருகே அத்தியூர் திருவாதி கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலர் குபேரன் தகவலில், விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் உட்பட குழுவினர் கள ஆய்வு செய்தனர். அப்போது, பல்லவர் காலத்தை சேர்ந்த மூத்த தேவி சிற்பம் இருப்பதை கண்டறிந்தனர்.
அதுகுறித்து ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது: அத்தியூர் திருவாதி கிராமத்தில், தென்பெண்ணை ஆற்றின் வடக்கு கரையில் கிடந்த சிலையை பார்த்த அப்பகுதி மக்கள், அங்கு சிறிய கோவில் அமைத்து, அம்மன் என வழிபட்டு வருகின்றனர். அதிலிருந்த சிற்பம், ஜேஷ்டாதேவி என்றழைக்கப்படும் மூத்ததேவி சிற்பமாகும். அச்சிற்பம், பல்லவர் காலம் கி.பி., 7,- 8ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஜடாபாரம் எனப்படும் உச்சிகொண்டையுடன் கூடிய தலை அலங்காரத்துடன், அந்த மூத்த தேவி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. காதணிகள், கழுத்தணி, சரிந்த வயிற்றுடன் அழகாக காட்சியளிக்கிறார். இடுப்பு முதல் கணுக்கால் வரை இடை ஆடை காட்டப்பட்டுள்ளது. வலது கரம் தாமரை மொட்டினை ஏந்தியும், இடது கரம், செல்வ குடத்தின் மீது வைத்த நிலையில் காணப்படுகிறது. இரு கால்களையும் அகட்டி தொங்கவிட்ட நிலையில் பத்திராசனத்தில் அமர்ந்து இருக்கிறார். மூத்த தேவியின் இருபக்கங்களிலும் அவளது மகன் மாந்தன், மகள் மாந்தி ஆகியோர் குழந்தை வடிவில் உள்ளனர். பொதுவாக மூத்த தேவி சிற்பங்களில், காக்கை கொடி ஓரிடத்தில் மட்டுமே காட்டப்பட்டிருக்கும். ஆனால், இந்த சிற்பத்தில் வலது, இடது என இரு பக்கங்களிலும் காக்கை கொடி காட்டியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில், ஏற்கனவே நன்னாடு உட்பட பல்வேறு பகுதிகளில் மூத்ததேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சிற்பம், பல்லவர் கலை வரலாற்றுக்கு புதிய வரவாகும். இவ்வாறு அவர் கூறினார்.