பதிவு செய்த நாள்
21
ஜூன்
2025
08:06
கோவை: கோவை மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை மற்றும் முருகன் வரலாறு கூறும் அருங்காட்சியகம் அமைக்க, அரசு துறை உயரதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
கோவை மாவட்டம் மருதமலையில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் ஏழாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இக்கோவில் அடிவாரத்தில், 110 கோடி ரூபாயில், 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிராந்திகுமார், திரைப்பட கலை இயக்குனர் சாபு சிரில், அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர், சிலை அமைவிடம், அடிவாரம், அதனைச் சுற்றி அமைய உள்ள அருங்காட்சியகம், அதிநவீன வசதிகளுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பது தொடர்பாக, நேற்று ஆய்வு செய்தனர். அடிவாரத்தில், கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், வனத்தை பாதிக்காத வகையில் சிலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அடிவாரத்தில் இருந்து மலை மீதுள்ள கோவிலுக்குச் செல்லும் வரை, மருதமலை முருகனின் வரலாற்றை நினைவில் கொள்ளும் வகையில், வழியெங்கும் முருகன் சார்ந்த சிலைகள், ஓவியங்கள், மின் விளக்குகளை, ஆன்மிகத்தை சார்ந்தும், வனத்தை பாதிக்காமலும் அமைக்கலாம் என, கலை இயக்குனர் சாபு சிரில் ஆலோசனை தெரிவித்தார். அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரையுள்ள படிக்கட்டு பாதையை சீரமைத்து, நகரும் படிக்கட்டு அமைக்க திட்டமிட்டுள்ளனர்.