பதிவு செய்த நாள்
21
ஜூன்
2025
09:06
திருப்பூர்; ‘‘தலபுராணம் போன்ற ஆன்மிக நுால்களை தினமும் படிக்க வேண்டும்,’’ என, தருமபுரம் ஆதினம் மாசிலாமணி தேசிகஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பேசினார். அவிநாசியில் உள்ள பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், உலக நலன் வேண்டி மஹா ருத்ர யாகவேள்வி இருநாட்கள் நடந்தது. இதையொட்டி, கோவில் தல புராணத்தின் மூன்றாவது பதிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
பெங்களூரு வேத ஆகம சமஸ்கிருத மகா பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் வரவேற்றார். கூனம்பட்டி ஆதினம் ராஜசரவண மாணிக்கவாசக சுவாமிகள், வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வரர், கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள் முன்னிலை வகித்தனர். தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அவிநாசி கோவில் தலபுராண புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது: அவிநாசியப்பரை, ‘அரிய பொருளே அவிநாசியப்பா...’ என்கிறோம். இறைவனை தேடி பல இடங்களில் தவம் இயற்றினார்கள்; சிவபெருமானோ, காசியில் இருந்து அவிநாசி வந்து அருள்பாலித்து வருகிறார். நமக்கு வேண்டியதை தாய், தந்தையாக இருக்கும் சிவபெருமானே கொடுப்பார்; வேறு எங்கும் தேடிச்செல்ல வேண்டியதில்லை என்பதை உணர்த்தவே, திருமுருகன்பூண்டியில் வேடுபறி திருவிளையாடல் நிகழ்ச்சியுள்ளார்.
அவிநாசி தல புராணம் போன்ற ஆன்மிக நுால்களை தினமும் படிக்க வேண்டும்; பூஜை அறையில் வைத்து பூஜித்தால் மட்டும் போதாது. எனது ஏழு வயதில் துவங்கி, தினமும் இரண்டு மணி நேரம் பாராயணம் செய்து வருகிறேன். இறைவனிடம் வேண்டினால், அனைத்தும் கிடைக்கும் என்பதையே, அவிநாசி கோவில் தல புராணம் உணர்த்துகிறது. மானிடராக பிறந்தவர்கள், தர்மம் தழைக்கும் வகையில் சிவபூஜைகள் செய்து புண்ணியம் சேர்க்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், அறநிலையத்துறை இணை கமிஷனர் ரத்தினவேல் பாண்டியன், கோவில் செயல் அலுவலர் சபரீஸ்குமார், சிவாச்சார்யார்கள் பெற்றுக்கொண்டனர்.