பதிவு செய்த நாள்
21
ஜூன்
2025
12:06
மதுரை; மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் திடலில் அமைக்கப்பட்டுள்ள முருகனின் அறுபடை வீடுகளின் அருட்காட்சியை தமிழக கவர்னர் ஆர் என் ரவி பார்வையிட்டு வணங்கினார்.
மதுரை புறவழிச்சாலையில் பாண்டி கோவில் அருகே அமைந்துள்ள அம்மா திடலில் நாளை இந்து முன்னணியின் சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இத்தொடரில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடு அருட்காட்சியை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்வையிட்டு வணங்கி வருகின்றனர். இந்நிலையில் உலக யோகா தினத்தை முன்னிட்டு வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக கவர்னர் ஆர் என் ரவி, இன்று காலை 11 மணி அளவில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் திடலுக்கு வருகை தந்தார். அங்குள்ள அறுபடை வீடுகள் கண்காட்சியை பார்வையிட்டு, தமிழ் கடவுள் முருகனை வணங்கி மகிழ்ந்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் கடவுள் முருகன் என்று போற்றி வணங்கப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளை ஒரே இடத்தில் பார்த்து தரிசித்தது மகிழ்ச்சியாக உள்ளது. முருகனைப் போன்றே சிவபெருமானும் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று போற்றி புகழ்ந்தாலும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் கடவுள் ஆவார். இது நமது கலாச்சாரத்தின் அடையாளம் என்றார்.
முன்னதாக கண்காட்சிக்கு வருகை தந்து வாங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழ் வளர்த்த இடம் மதுரை. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டு படை வீடுகள் மதுரையில்தான் உள்ளன. அத்தகைய புகழ்பெற்ற புண்ணிய பூமி மதுரையிலே முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுவது பொருத்தமானது. அறுபடை வீடுகளும் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருப்பது மிக மிக அருமை. இதில் அரசியல் கிடையாது. இருப்பினும் ஆன்மிகம் என்பது வாழ்வியல் நெறிமுறைகளை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்குமான ஒரு ஏற்பாடாகும் என்றார்.