பதிவு செய்த நாள்
22
ஜூன்
2025
01:06
– நமது நிருபர் –
பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், கோவில்களின் சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்நிலையில், கோவில் இருந்ததற்கான அடையாளமே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன. சின்ன நெகமத்தில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 7 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், கோவில் இருந்த இடம், புதர் மண்டி காணப்படுகிறது. கோவில் இருந்ததற்கான அடையாளமாக துாண்களும், ஒரு கல்வெட்டு மட்டுமே மிஞ்சியுள்ளன.
கல்வெட்டு குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘கல்வெட்டுகள், 17ம் நுாற்றாண்டை சேர்ந்தவை. 10வது நெகமம் பாளையப்பட்டு முத்து வல்ல கொண்டம்ம நாயக்கர் காலம்; 1659 – 1673ம் ஆண்டாக உள்ளது. கல்வெட்டின் இருபுறமும் ஆராய்ச்சி செய்து பார்த்தால், முழு விபரங்கள் கிடைக்கும்’ என்றனர்.
கொல்லப்பட்டியில், பழமை வாய்ந்த வெங்கிடரமணசுவாமி கோவில் என, ஆவணங்களில் உள்ளது. அந்த இடத்தில், கோவிலுக்கான எவ்வித அடையாளமும் இல்லை. தற்போது மகளிர் சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம், பள்ளி வளாகம் அமைந்துள்ளன.
கோவிலை காணவில்லை என்றாலும், கோவிலுக்கு சொந்தமான, 12 ஏக்கர் நிலம், ஆ.நாகூர் பகுதியில் உள்ளது. ஆவணங்களில் உள்ள கோவில் மறைந்து போனது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, கோவிலை மீட்டெடுக்கவும், கோவில் சொத்து வாயிலாக வருவாய் ஏற்படுத்தி, கோவில் உருவாக்கவும் நடவடிக்கை எடுக்காதது புரியாத புதிராக உள்ளது.
ஆவலப்பம்பட்டியில் வேலாயுதசுவாமி கோவிலை பார்வையிட சென்ற அறநிலையத்துறை அதிகாரிகளே அதிர்ச்சியடைந்துள்ளனர். கோவிலுக்கு சொந்தமாக, 40 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், பராமரிப்பு இல்லாமல் கோவில் சிதிலமடைந்துள்ளது.
முருக பெருமானுக்கு அங்கவஸ்திரம் கூட அணிவிக்காமல், சிலைக்கு மட்டும் பூஜை நடத்துவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். நிலத்தை அனுபவிப்பவர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்ததுடன், கோவிலை பராமரிக்க அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நிலங்களை மீட்க சென்றால், அரசியல் தலையீடுகள், மிரட்டல்கள் வருகின்றன. இதையெல்லாம் தாண்டி நிலத்தை மீட்டெடுக்க நினைத்தாலும், பாதுகாப்பு இல்லாத சூழலே உள்ளது. இப்பிரச்னைகளை உயர்மட்டத்துக்கு எடுத்து சென்று, கோவில் நிலங்களை மீட்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.