பதிவு செய்த நாள்
22
ஜூன்
2025
01:06
கோவை: ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த ஸரஸ்வதி சுவாமியின் ஜென்ம தின வைபவத்தை முன்னிட்டு, கோவை ராம்நகர் அய்யப்பன் பூஜா சங்கத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கோவைக்கு வருகை தந்துள்ள, ஆதி சங்கராச்சார்ய சாரதா லட்சுமி ந்ருஸிம்ஹ பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த ஸரஸ்வதி சுவாமிகள், இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
நேற்று காலை, 8:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் விசேஷ திருமஞ்சனம் சங்கல்ப சேவை, கொங்கு மண்டல நாம சங்கீர்த்தன குழுவினரின், அகண்ட நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சிகள் நடந்தன.
காலை 11:30 மணிக்கு, மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. பட்டுப்புடவை, திருமாங்கல்யம், திருமண மாலைகள், பழங்கள், பட்சணங்கள் என, 51 வகையான சீர்வரிசைகளுடன் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது.
அதன்பின் ஊஞ்சல் சேவா, மாலை மாற்றுதல், பிடி சுற்றுதல் நிகழ்வுகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம், மாலை, 3:00 மணிக்கு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மாலை 5:00 மணிக்கு, கோவை மாநகர பக்தர்களுடன் சுவாமிகளின் நகர்வலம் நடந்தது. இதில், தையம், செண்டை மேளம், நாதஸ்வரம் உள்ளிட்ட நான்கு விதமான கலைஞர்கள் பங்கேற்றனர். இரவு 7:30 மணிக்கு, ஸ்ரீசக்ர நவாவர்ண பூஜை நடந்தது.
இன்றைய நிகழ்ச்சிகள்
இன்று காலை 7:30 மணிக்கு, ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் சிறப்பு ஆஹ்னிகா தரிசனம் நடக்கிறது. காலை 9:30 முதல் காலை 10:30 மணி வரை, லட்சுமி ந்ருஸிம்ஹ சகஸ்ரநாம பாராயணம் நடக்கிறது.
காலை 10:30 மணிக்கு, சண்டிகா ஹோமம் மற்றும் ஆயுஷ்ய ஹோம பூர்ணாஹூதி நடக்கிறது. மதியம் 12:30 மணிக்கு மஹாஸ்வாமிகளின் அனுகிரஹபாஷணம் நடக்க உள்ளது. மாலை 5:30 முதல் இரவு 7:30 மணி வரை, சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தின் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது.