பதிவு செய்த நாள்
22
ஜூன்
2025
10:06
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் ஆனி மாத கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககவசம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் தேர்வீதியில் வலம் வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிருத்திகை விழா என்பதால், அதிகாலை 5:00 மணி முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர்வீதியில் குவிந்தனர். பொதுவழியில் ஐந்து மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், இரண்டரை மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். சில பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்தும், காவடிகள் எடுத்தும், அலகு குத்தினர். மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கோவில் நிர்வாகம் சார்பில், நான்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.