பதிவு செய்த நாள்
23
ஜூன்
2025
10:06
திருச்சி; ஆசியாவின் மிக உயர்ந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ராஜகோபுரத்தைக் கட்டிய அகோபிலமட பரம்பரையில் 46வது பட்டம், ஸ்ரீரங்கநாத யதீர்ந்திர மகாதேசிகன் ஜீயர் சுவாமிகளின் 70வது திருநட்சத்திர பூர்த்தி விழா 30 ல் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு திருநட்சத்திர பூர்த்தி விழா ஸ்ரீரங்கம் தசாவதார சன்னதி அகோபிலமடத்தில் ஜூன்20 ல் தொடங்கியது. நாளை நரசிம்மர் ஆன்மிக நாடகம், ஜூன் 25 முதல் 28 வரை வாய்ப்பாட்டு, ஜூன் 29ல் நாம ஸங்கீர்த்தனம் நடைபெற உள்ளது. ஜூன் 24ல் ஜீயர் சுவாமிகள், 71 மஹா வித்வான்களை சன்மானம் வழங்கி கவுரவப்படுத்துகிறார். வேத பாராயணம் ஜூன் 25ல் தொடங்கி 29 வரை நடக்கிறது. இதில் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் மற்றும் அவற்றின் அனைத்து உட்பிரிவுகளையும் பாராயணம் செய்ய உள்ளனர். ஜூன் 29 மாலை, ஸ்ரீரங்கம் வீதிகளில் ஜீயரின் பட்டினப்பிரவேசம், ஜூன் 30ல் ஜீயர் திருநட்சத்திரப் பூர்த்தி மகோத்வசம் நடைபெறுகிறது. இதில் வைணவ திவ்ய தேசங்களில் இருந்தும், அகோபில மடம் ஆதினத்துக்குட்பட்ட கோயில்களில் இருந்தும் பிரசாதங்கள் சுவாமிக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளன. பக்தர்களுக்கு ஜீயர் சுவாமிகள், ஸ்ரீபாத தீர்த்தம் வழங்குகிறார். அன்று மாலை 71 வித்வான்கள் கலந்து கொள்ளும் பஞ்சரத்ன கீர்த்தனை கோஷ்டி கானம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விழா ஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.