பதிவு செய்த நாள்
23
ஜூன்
2025
11:06
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆனி கிருத்திகை விழா, நேற்று விமரிசையாக நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி பெருமாள் கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்றும், ஆனி மாத கிருத்திகை விழா, வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று காலை 3:00 மணியளவில், கோவில் நடை திறக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளுடனும் கிருத்திகை வந்ததால், சுவாமியை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். பக்தர்களில் பலர் காவடி எடுத்தும், மொட்டை அடித்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். இத்துடன், வட்ட மண்டப தொட்டியில் உப்பு, மிளகு ஆகியவற்றை, பிரார்த்தனையாக செலுத்தினர். ஆடு, சேவல்களை பிரார்த்தனையாக கோவிலுக்கு விட்டனர். சிதறு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முருகர் உருவ பொம்மைகளை, உண்டியல்களில் போட்டனர். மாலையில் கந்தசுவாமி பெருமான், வள்ளி மற்றும்- தெய்வானையுடன், சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளிலும் திருவீதிவுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகம், மாடவீதிகள் என, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு, பரணி உத்சவத்தில் கந்த பெருமான் சிறப்பு அலங்காரத்தில், மயில் வாகனத்தில் மாடவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அர்ச்சனை செய்து கந்த பெருமானை வழிபட்டனர்.