பதிவு செய்த நாள்
23
ஜூன்
2025
11:06
காஞ்சிபுரம்; பெரிய காஞ்சிபுரம், திரவுபதியம்மன் கோவில் அக்னி வசந்த மஹாபாரத பெருவிழாவின், 21வது நாள் உத்சவமான நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதி திருவிழாவும் விமரிசையாக நடந்தது. பெரிய காஞ்சிபுரம், செங்கழுநீரோடை வீதி கிழக்கு பகுதி, பூக்கடை சத்திரம் அருகில் உள்ள தர்மராஜர் சமேத திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த மஹாபாரத விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் மதியம் 2:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் கோவிந்தராஜ் மஹாபாரத சொற்பொழிவாற்றி வருகிறார். முனுசாமி கவி வாசித்து வருகிறார். விழாவில் மற்றொரு நிகழ்வாக கடந்த 12ம் தேதி முதல், தினமும் இரவு 10:00 மணிக்கு சிறுவஞ்சிபட்டு ரேணுகாம்பாள் கட்டை கூத்து நாடக மன்றத்தின், ஆசிரியர் சீதாராமன் குழுவினரின் மஹாபாரத நாடகம் நடந்து வருகிறது. இதில், 21வது நாள் உத்சவமான நேற்று, காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. மாலை தீமிதி திருவிழா நடந்தது. இதில், காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தீ மிதித்தனர்.