பதிவு செய்த நாள்
23
ஜூன்
2025
11:06
காஞ்சிபுரம்; பள்ளூர் வராஹி கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், திரிபுரசுந்தரி சமேத திருக்குகேஸ்வரர் கோவிலுடன் இணைந்த வராஹி என்கிற அரசாலையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மன் கோவிலாகும். இங்கு, வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி, அமாவாசை உள்ளிட்ட முக்கிய மங்கள நாட்களில், காஞ்சிபுரம், அரக்கோணம், சென்னை, வேலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பெண் பக்தர்கள் கோவிலுக்கு வந்து நேர்த்தி கடன் செலுத்திவிட்டு செல்கின்றனர். பஞ்சமி தினத்தன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி, ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வாகம், 200 நபர்களுக்கு அன்னதான திட்டத்தை சமீபத்தில் துவங்கியுள்ளது. இதுதவிர, 28.60 லட்ச ரூபாய் மதிப்பில், புதுப்பித்தல் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிக்குரிய டெண்டர் படிவத்தை, ஜூலை- 8ம் தேதி சம்பந்தப்பட்ட செயல் அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுமான பணிக்கு, கோவிலை சுற்றி இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை, வருவாய், காவல், ஹிந்து சமய அறநிலையத் துறையினர் ஆகியோர் இணைந்து சமீபத்தில் அகற்றினர். இந்நிலையில், வராஹி கோவில் கட்டுமானத்தில் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என, கிராம மக்களில் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, பள்ளூர் வராஹி கோவில் செயல் அலுவலர் பிரகாஷ் கூறியதாவது: கோவிலுக்கு முன் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை சமீபத்தில் அகற்றினோம். அதில் பாதிக்கப்பட்ட நபர்களில் ஒரு சிலர் புரளி கிளப்பியுள்ளனர். வராஹி கோவிலுக்கு ஒதுக்கீடு செய்த நிதியை பயன்படுத்தி வளர்ச்சி பணிகள் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.