மதுரை; மதுரை, விராட்டிபத்து முத்தாலம்மன் கோயிலை மக்கள் எதிர்ப்புக்கு இடையே போலீஸ் பாதுகாப்புடன் அறநிலையத்துறை கையகப்படுத்தியது.
இக்கோயில் பரம்பரை அறக்காவலராக மூன்று சமுதாயத்தினர் இருந்தனர். கோயிலை 2005ல் அறநிலையத்துறை கட்டுப்படுத்த முயற்சித்ததால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. 2018ல் பொதுமக்களில் மூவரை நியமித்து கோயில் சாவியை வழங்கும்படி தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பாக மீண்டும் வழக்கு தொடுக்கப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கோயில் மற்றும் பாதுகாப்பு அறையின் பூட்டை உடைத்து திருவிழா நடத்த அறநிலையத்துறை முயற்சிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
அதிகாரிகள் கூறியதாவது: கோயில் பரம்பரை அறக்காவலர்கள் கோயிலை நிர்வகிக்காமல் நீண்டநாள் பூட்டி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஆண்டு அவர்களை அறநிலையத்துறை தற்காலிக பதவிநீக்கம் செய்து நிர்வாக பொறுப்புகளை கவனிக்க மதனகோபாலசுவாமி கோயில் செயல் அலுவலர் தக்காராக நியமிக்கப்பட்டார். அதன் பின் கோயில் சாவியை பரம்பரை அறக்காவலர்கள் தர மறுத்தனர். அதனால் கோயில், பாதுகாப்பு அறையை திறந்து அறநிலையத்துறை சார்பில்சிம்மவாகனத்தை கருவறையில் வைத்து பூஜை நடந்தது. தொடர்ந்து கோயிலை புனரமைத்து திருவிழா நடத்தப்படும் என்றனர்.