பதிவு செய்த நாள்
24
ஜூன்
2025
10:06
மைசூரு; கர்நாடகாவின் காவல் தெய்வமாக விளங்கும் சாமுண்டீஸ்வரி, மைசூரின் சாமுண்டி மலையில் குடிகொண்டு அருள்பாலிக்கிறார். வழக்கம்போன்று ஆஷாடா எனும் கன்னட ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமையை கொண்டாட, கோவில் நிர்வாகம் தயாராகிறது. மைசூரு நகரின் சாமுண்டீஸ்வரி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவில் வரலாற்று பிரசித்தி பெற்றது. கர்நாடகாவின் பணக்கார கோவில்களில் இதுவும் ஒன்றாகும். மாதந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் வருகிறது. வெளி மாவட்டம், நாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
அலைமோதும்; ஆண்டுதோறும் தசரா திருவிழா, சாமுண்டீஸ்வரி கோவிலில் பூஜை செய்த பின்னரே துவங்கப்படும். கன்னட ஆஷாடா மாதத்தில், ஐந்து வெள்ளிக் கிழமைகளும் சாமுண்டீஸ்வரி மலை, திருவிழா போன்று களை கட்டியிருக்கும். பக்தர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருக்கும். வரும் 27ம் தேதி முதல் வெள்ளிக்கிழமை வருகிறது. சாமுண்டீஸ்வரி தீய சக்திகளை அகற்றி, பக்தர்களுக்கு நல்வாழ்வு அளிப்பதாக ஐதீகம். புதிதாக தொழில் துவங்குவோர், தீவினைகளால் அவதிப்படுவோர், தொழிலில் நஷ்டமடைந்தோர், திருமண தடை உள்ளவர்கள், குழந்தை இல்லா தம்பதியர் என, பலரும் சாமுண்டீஸ்வரியை தரிசித்து, பலன் அடைகின்றனர். வரும் 27ம் தேதி, ஆஷாடா மாத முதல் வெள்ளிக் கிழமையை கொண்டாட, கோவில் நிர்வாகம் தயாராகிறது. சாமுண்டீஸ்வரி கோவில் சுற்றுப்பகுதிகள், மின் விளக்குகளால் அழகுப்படுத்தப்படுகிறது. கோவில் முன் மண்டபம் அமைக்கப்படுகிறது. பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்புகள் பொருத்தப்படுகின்றன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றன.
இதுகுறித்து, சாமுண்டீஸ்வரி கோவில் செயலர் ரூபா, நேற்று அளித்த பேட்டி: ஆஷாடா மாத வெள்ளிக் கிழமை வருவதால், கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மைசூரில் இருந்து சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு செல்ல, இரண்டு கவுன்டர்களில், 300 ரூபாய் டிக்கெட் கொடுக்க வசதி செய்துள்ளோம். நகர பஸ் நிலையத்தில், 300 ரூபாய் டிக்கெட் பெற வேண்டும். கோவிலில் டிக்கெட் அளிக்கப்படாது.
ரூ.300 டிக்கெட்; லலித மஹால் ஹெலிபேடில், 10 முதல் 15 டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்படுகின்றன. இங்கு பொது டிக்கெட், 300 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் டிக்கெட் அளிக்கப்படும். யு.பி.ஐ., போன் பே, கூகுள் பே வழியாக பணம் செலுத்த, தனித்தனி வரிசைகள் இருக்கும். ஏ.ஐ., கேமராக்கள் கண்காணிப்பு, மின் விளக்குகள், பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. அந்தந்த டிக்கெட்டுகளுக்கு ஏற்ப, பஸ்களுக்கு தனித்தனி வரிசை இருக்கும். லலித மஹால் ஹெலிபேடில், கழிப்பறை வசதி செய்யப்படுகிறது. பக்தர்கள் கொண்டு வரும் பிரசாதங்கள், ஹெலிபேடில் விநியோகிக்க வசதி செய்து தரப்படும். மலையில் தனியார் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 300 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்களுக்கு, ‘ட்ரை புரூட்’ பாக்கெட்டுகள் அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, மருத்துவ வசதி இருக்கும். சாமுண்டி மலை கோவில் அருகில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்படும். வரிசையில் நிற்கும் அனைத்து பக்தர்களுக்கும் குடிநீர் பாட்டில், ஐந்து இடங்களில் கழிப்பறை வசதி செய்யப்படும். பாதாம் பால் விநியோகிக்கப்படும். பக்தர்கள் தரிசனம் முடிந்து, பஸ் ஏற வரும் பக்தர்களுக்கு, இரண்டு இடங்களில் உணவு வசதி செய்யப்பட்டுள்ளது. ஆஷாடா வெள்ளியை கொண்டாட, அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.