பதிவு செய்த நாள்
24
ஜூன்
2025
11:06
மதுரை; திருச்செந்துார் கோயிலில் ஜூலை 7ல் கும்பாபிஷேகத்தை காலை 6:00 முதல் காலை 6:47 மணிவரை நடத்த நிபுணர் குழு முடிவு செய்துள்ளது. இதில் தலையிட விரும்பவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயில் விதாயகர் சிவராம சுப்ரமணிய சாஸ்திரிகள் ஏற்கனவே தாக்கல் செய்த பொதுநல மனு: கோயில் பூஜைகளுக்கான நேரம் நிர்ணயிப்பது, பூஜைகள் எவ்வாறு செய்வது, ஒவ்வொரு நிகழ்விற்கும் ஆகம கொள்கையை பின்பற்ற அறிவுறுத்துவது எனது கடமை. சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஜூலை 7 ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆகம கொள்கை, வேத நடைமுறை, சடங்குகளின்படி கும்பாபிஷேக தேதி, நேரத்தை என்னிடம் கலந்தாலோசிக்காமல் தேவஸ்தானம் நிர்ணயித்தது. குறைபாடு, தோஷங்களை நீக்க மற்றும் நாட்டின் நலனிற்காக அபிஜித் முகூர்த்தத்தில் ஜூலை 7 மதியம் 12:05 முதல் 12:45 மணிவரை கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும். அந்நேரத்தை பின்பற்றாமல் கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
மே 21 ல் நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது. அறநிலையத்துறை தரப்பு: மனுதாரரே ஜூலை 7 ல் காலை 6:00 மணி முதல் காலை 6:50 மணி வரை கும்பாபிஷேகம் நடத்தலாம் என நேரத்தை நிர்ணயித்து வழங்கினார். பெரும்பாலான நிபுணர்கள் கும்பாபிஷேகத்தை காலை 6:05 முதல் காலை 6:50 மணி வரை நடத்தலாம் என ஒப்புக்கொண்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கும்பாபிஷேகம் தேதி, நேரத்தை நீதிமன்றம் நிர்ணயிக்க முடியாது. நிபுணர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். மனுதாரர், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தலைமை அர்ச்சகர் பிச்சை குருக்கள், திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயில் தந்திரி சுப்ரமணியரு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் ஸ்தானிகர் ராஜா பட்டர், கேரளா சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தியை கொண்ட குழு அமைக்கப்படுகிறது. அக்குழு நேரத்தை முடிவு செய்யலாம் என இரு தரப்பிலும் ஒப்புக்கொண்டுள்ளனர். குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.
இதை மறு சீராய்வு செய்யக்கோரி விதாயகர் சிவராம சுப்ரமணிய சாஸ்திரிகள் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது. அறநிலையத்துறை தரப்பு: நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு உறுப்பினர்களில் மனுதாரரைத் தவிர மற்றவர்கள் காலை 6:00 முதல் காலை 6:47 மணிவரை கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளனர். இவ்வாறு தெரிவித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஜூலை 7 ல் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்கு நிபுணர் குழு நிர்ணயித்த நேரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.