பதிவு செய்த நாள்
25
ஜூன்
2025
01:06
திருநகர்: மதுரை விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கு மத்திய அரசின் தொழில்துறை மற்றும் உற்பத்தி மேம்பாட்டு துறை புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் தங்களது வாழ்வாதாரம் உயரும் என பொம்மை தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். விளாச்சேரியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பொம்மைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சீசனுக்கு தகுந்தாற்போல் சுவாமி சிலைகள், அரசியல் தலைவர்களின் சிலைகள், மூன்று இஞ்ச் முதல் 10 அடி உயரம்வரை விநாயகர் சிலைகள் மற்றும் இரண்டரை அடி உயர மெகா சைஸ் அகல் விளக்குகள், நவராத்திரி கொலு பொம்மைகள், கிறிஸ்துமஸ் குடில்கள் ஆகியவற்றை களிமண், காகிதக் கூழ், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், சிமென்டில் தயாரிக்கின்றனர். இங்கு தயாராகும் பொம்மைகள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கின்றன. இங்கு தயாரிக்கப்படும் களிமண் பொம்மைகளுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழக அரசின் விருது பெற்ற மூத்த கைவினை கலைஞர் ராமலிங்கம் கூறியதாவது: பரம்பரை பரம்பரையாக களி பொம்மைகள் தயாரிப்பு தொழிலில் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகிறோம்.
நாங்கள் கைவினை பொருட்கள் தயாரிக்கிறோம். இதற்கு ஆதாரமாக இருப்பது களிமண். விளாச்சேரி கண்மாயில் கிடைப்பது தரமான உறுதித்தன்மை மிக்க களிமண். இந்த களிமண்ணில் செய்யக்கூடிய பொம்மைகள் வலிமையுடனும் பொலிவுடனும் காட்சியளிக்கும். விளாச்சேரி களிமண் மூலம் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் 300 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் பொலிவுடன் கோயில்களில் உள்ளன. உதாரணமாக கீழக்குயில்குடி கருப்பண்ண சுவாமி கோயிலில் உள்ள மூலவர் களிமண் சிலை 300 ஆண்டுகளுக்குமுன்பு விளாச்சேரியில் உருவாக்கப்பட்டது. இன்றளவும் அதன் பொலிவு மாறாமல் காட்சியளிப்பது வரலாற்று சிறப்பை விளக்குகிறது. விளாச்சேரி வேலார் தெருவிலுள்ள பெருமாள் கோயில் சாளகரத்திலுள்ள ஸ்ரீதேவி பூதேவி வெங்கடேசப் பெருமாள் களிமண் சிலைகள் 150 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டவை. கடுமையான வெயில், மழையிலும் சிறு சேதம் இன்றி இன்றளவும் தயாரிக்கப்பட்ட நிலையிலையே காட்சியளிக்கின்றன. இங்குள்ள களிமண்ணின் தரம், சிலைகளின் அழகிற்காக புவிசார் குறியீடு கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி. குலாலர் கைவினை கஞைர்கள் நலச்சங்கம் சார்பில் நிர்வாகிகள் சுந்தர், நாகராஜன், முருகன், விஜயகுமார், ஆறுமுகம் ஆகியோர் முயற்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை அக்ரி பிசினஸ் இன்குபடேசன் சென்டர் மூலம் புவிசார் குறியீட்டிற்கு விண்ணப்பிக்கப்பட்டது. அக்குழுவினர் ஏழு முறை ஆய்வு செய்தனர். பின்பு நேர்காணலுக்கு சென்றோம். பின்பு புவிசார் குறியீடு இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
கடந்த மாதம் கோவையில் நடந்த குறிஞ்சி மேளா 2025 கண்காட்சியில் புவிசார் குறியீடு சான்றிதழ் நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. முயற்சி மேற்கொண்ட குலால கைவினை கலைஞர்கள் நலச் சங்கத்திற்கும், மதுரை நபார்டு வேளாண் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையத்திற்கும் நன்றியை தெரிவிக்கிறோம். இதுவரை விளாச்சேரி களிமண் பொம்மைகளின் தரம், உழைப்பு, சிறப்புகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிரபலமாக இருந்தது. புவிசார் குறியீடு கிடைத்ததன் மூலம் உலகளவில் விளாச்சேரி களிமண் பொம்மைகளின் சிறப்பு உயரும்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் விற்பனை அதிகரிக்கும், உலகளவில் அதிக ஆர்டர்கள் கிடைக்கும். களிமண் பொம்மை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரும். கலை கிராமம் உருவாக்க கோரிக்கை: மதுரையில் களிமண், காகிதகூழ் பொம்மைகள், கற்சிற்பங்கள், மர சிற்பங்கள், மண்பாண்டங்கள், ஐம்பொம்சிலைகள் தயாரிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். அனைவரும் ஒரே இடத்தில் உற்பத்தி செய்யும் பொழுது உள்நாட்டு விற்பனையாளர்கள், வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர் பார்வையிட்டு நேரடியாக கொள்முதல் செய்ய கலை கிராமம் வாய்ப்பாக அமையும். இதுகுறித்து ஏற்கனவே மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு விளாச்சேரி கிராமம் ஏற்ற இடமாக உள்ளது. அங்கு கலை கிராமம் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.